என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    நீலகிரி வர விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: கலெக்டர் தகவல்

    வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி வர விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் நீலகிரி மாவட்டத்தில் சில பைன்பாரஸ்ட், தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி இல்லை. இ-பாஸ் பெற தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருகிறவர்கள் உரிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்தால் இ-பாஸ் வழங்கப்படும்.

    இ-பதிவு ஆனவுடன் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதலில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும். உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து வெளிமாவட்டங்களில் இருந்து வரலாம்.

    இ-பாஸ் தளர்வு காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வார விடுமுறை நாட்களில் அதிகரித்து உள்ளது. எனவே, உள்ளூர் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது என தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம்.

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4 பள்ளிகளில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டு உள்ளன. தற்போது 2 பள்ளிகளில் மட்டும் சிகிச்சை மையங்கள் இயங்கி வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கி குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 3 வீடுகள் சேதமடைந்து உள்ளன. கனமழையால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அபாயகரமான இடங்களை கண்டறிந்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி கண்காணித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×