search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதிகள் நேரடி விசாரணை

    யாரும் பேசுவதில்லை, தண்ணீர் பிடிக்க அனுமதிப்பதில்லை என்று எச்ஐவி ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளிடம் கூறினார்.
    மதுரை:

    மதுரையை சேர்ந்த அப்பாஸ்மந்திரி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு தவறுதலாக எச்.ஐ.வி. தொற்றுடன் ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் தானமாக பெற்ற ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது தான், இதற்கு காரணம். எனவே பாதுகாப்பான முறையில் ரத்ததானம் பெற உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இது அவரது 2-வது குழந்தையாகும். அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். அதில் 10 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் பெயரில் தேசிய வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீதமுள்ள 15 லட்சம் ரூபாயை மைனர்களான அவருடைய 2 பெண் குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் 2 படுக்கை அறைகளை கொண்ட சுற்றுச்சுவருடன் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்தநிலையில் தற்போது தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, “எச்.ஐ.வி. பாதித்த பெண் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் முன்பு நேரடியாக ஆஜரானார். அவர், தனக்கு அரசு கட்டித்தந்துள்ள வீட்டில் ஒரு படுக்கை அறை தான் உரிய வசதிகளுடன் உள்ளது. மேலும் நான் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர்கள் என்னிடம் பேசினாலோ, என்னை தாண்டி சென்றாலோ எச்.ஐ.வி. பரவிவிடுமோ என்று பயப்படுகின்றனர். இதனால் வேண்டாவெறுப்பாக என்னை பார்க்கின்றனர். பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க என்னை அனுமதிப்பதில்லை. எனவே எனக்கு தனியாக குழாய் இணைப்பை வழங்க வேண்டும்” என்று அழுது கொண்டே உருக்கமாக தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதிகள், “இந்த பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். எச்.ஐ.வி. வைரஸ் பாதித்தவருடன் பேசினாலோ, அவரை கடந்து சென்றாலோ வைரஸ் தொற்று ஏற்படாது என்று அந்த கிராமத்தினருக்கு டாக்டர்கள் குழு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதேபோல இந்த பெண்ணின் கணவரும் துன்புறுத்தி வருவதாக தெரிவித்ததால், அவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பான நடவடிக்கையை எடுத்ததற்கான அறிக்கையை நவம்பர் மாதம் 5-ந்தேதி தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    Next Story
    ×