search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உமாமகேஸ்வரி
    X
    உமாமகேஸ்வரி

    பெண் டாக்டருக்கு முதல்-அமைச்சர் விருது தேடி வந்தது எப்படி?: அவரே அளித்த விளக்கம்

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் பணியாற்றும் பெண் டாக்டருக்கு முதல்-அமைச்சர் விருது தேடி வந்தது எப்படி? என்பது தொடர்பாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் டாக்டராக பணியாற்றுபவர் உமாமகேஸ்வரி (வயது 41). முதுநிலை மருத்துவரான இவர், அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மருத்துவ பிரிவு முழுமையாக கொரோனா வார்டாக மாற்றப்பட்ட பின்னரும் அந்த வார்டிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

    கொரோனா வார்டில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதிப்புக்குள்ளான 30 கர்ப்பிணிகளுக்கு தொடர் சிகிச்சை அளித்து அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லாத குழந்தைகள் பிறப்பதற்கு தேவையான சிகிச்சைகளை அளித்தார். மேலும் குழந்தை பிறந்த பின்னரும் தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொண்டதுடன், தாய்மார்களும் பூரண குணம் அடைய உதவினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் கொரோனா சிகிச்சை பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட 9 டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த பட்டியலில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டர் உமாமகேஸ்வரியும் இடம் பெற்றுள்ளார்.

    கொரோனா வார்டில் பணியாற்றிய டாக்டர் உமாமகேஸ்வரியின் கணவர் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் ஆவார். மாமனார் விருதுநகரில் நீண்டகாலமாக மருத்துவ ஆய்வகம் நடத்தி வருகிறார். டாக்டர் உமாமகேஸ்வரிக்கு 8 வயதில் மகளும், 4 வயதில் மகனும் உள்ளனர்.

    4 வயது மகன் தாயை பிரிந்து இருக்க முடியாத நிலையில் தினசரி அரசு ஆஸ்பத்திரியில் பணியை முடித்து டாக்டர் உமாமகேஸ்வரி வீட்டிற்கு வந்து சென்றார். அவருக்கு நோய் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், அவரது கணவர், மாமனார், மாமியார் மற்றும் 2 குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அனைவரும் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். டாக்டர் உமாமகேஸ்வரியின் குடும்பத்தினர் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதிலும் டாக்டர் உமாமகேஸ்வரியை தொடர்ந்து பெண்களுக்கான கொரோனா வார்டில் பணியாற்ற ஊக்குவித்துள்ளனர்.

    இதுகுறித்து டாக்டர் உமாமகேஸ்வரி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவினை முழுமையான கொரோனா வார்டாக மாற்ற நடவடிக்கை எடுத்த கலெக்டர் கண்ணனுக்கும், சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரனுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இதன் மூலமே கொரோனா பாதிப்பு அடைந்த கர்ப்பிணிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடிந்தது. நான் மட்டும் 30 கர்ப்பிணிகளுக்கு கொரோனாவில் இருந்து விடுபட சிகிச்சை அளித்ததுடன் நோய்பாதிப்பு ஏற்படாமல் குழந்தை பிறக்கவும் நவீன சிகிச்சை அளித்தேன். என்னுடன் டாக்டர்கள் பிச்சைக்காளி, முனிரா, ஆயிஷாகனி ஆகியோரும் இப்பிரிவில் பணியாற்றி, கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் நோய்பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை அளித்தனர்.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பெண்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால்தான் நானும் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடிந்தது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள விருது தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

    நோய் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் எனது குடும்பத்தினர் என்னை தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்ற அனுமதி அளித்து ஊக்கப்படுத்தியதற்காக அவர்களுக்கும் எனது நன்றி. அரசும், மாவட்ட நிர்வாகமும் கொரோனா வார்டில் நாங்கள் முழு பாதுகாப்போடு பணியாற்ற தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தது. அதன் மூலமே நாங்களும் ஈடுபாட்டோடு பணியாற்ற முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×