என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரியில் இறங்கி போராட்டம்
    X
    ஏரியில் இறங்கி போராட்டம்

    வில்லியனூர் அருகே ஆக்கிரமிப்பை கண்டித்து ஏரியில் இறங்கி திடீர் போராட்டம்

    வில்லியனூர் அருகே ஏரி ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வில்லியனூர்:

    வில்லியனூரை அடுத்த சிவராந்தகம் பகுதியில் பிரெஞ்சு காலத்தில் 8 ஏக்கர் பரபரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் கீழுர், மண்டகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம். இந்த ஏரி நிரம்பிய பிறகு கோர்க்காடு ஏரிக்கு பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஏரியை சுற்றியுள்ள 145 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. நாளடைவில் ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. தற்போது மழைக்காலத்தில் மட்டுமே ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது.

    இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஏரியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை தனக்கு சொந்தமானது என்று கூறி ஆக்கிரமித்துள்ளார். ஏரியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி சாய்த்து தீயிட்டு கொளுத்தி உள்ளார். ஏரிக் கரைகளை சமன் செய்து ஆழ்துளை கிணறு அமைக்கவும் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய், காவல், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை ஏரியின் உள்ளே தண்ணீரில் இறங்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், ஏரியை மீட்டெத்து நீர்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    Next Story
    ×