search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறி மார்க்கெட்
    X
    காய்கறி மார்க்கெட்

    புதுக்கோட்டையில் உழவர் சந்தை கூட்டத்தை குறைக்க பள்ளியில் காய்கறி மார்க்கெட்

    உழவர் சந்தையில் கூட்டத்தை குறைப்பதற்காக உழவர் சந்தை அருகில் உள்ள சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டு, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரில் உழவர் சந்தை, பெருமாள் கோவில் மார்க்கெட், சாந்தாரம்மன் கோவில் மார்க்கெட், அனுமார்கோவில் மார்க்கெட் போன்றவை முக்கியமான காய்கறி விற்பனை செய்யும் இடங்களாகும். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை தொடர்ந்து பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது காய்கறி வாங்க வரும் மக்களின் கூட்டத்தை குறைப்பதற்காக புதிய பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டதையடுத்து, மீண்டும் காய்கறி மார்க்கெட்டுகள் ஏற்கனவே செயல்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டன. தற்போது புதுக்கோட்டையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் உழவர் சந்தையில் கூட்டத்தை குறைப்பதற்காக உழவர் சந்தை அருகில் உள்ள சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டு, காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் புதிய பஸ் நிலையத்திற்கு காய்கறி மார்க்கெட்டை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

    இதுகுறித்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன் கூறுகையில், புதுக்கோட்டை உழவர் சந்தையில் மொத்தம் 100 கடைகள் உள்ளன. இங்கு கூட்டம் அதிகமாக கூடுவதால், அங்கிருந்து 40 கடைகள் உழவர் சந்தை அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி வரை மட்டுமே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டால் காய்கறி கடைகளை மீண்டும் மாற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், பஸ் நிலையத்திற்கு காய்கறி மார்க்கெட்டை மாற்றவில்லை. மேலும் மற்ற பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தால், அங்குள்ள கடைகளும் வேறு இடத்திற்கு மாற்றப்படும், என்றார்.
    Next Story
    ×