என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை: 35 கிராம ஊராட்சிகளில் சமூக விழிப்புணர்வு குழுக்கள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 35 கிராம ஊராட்சிகளில் சமூக விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டார். அவர் குன்னூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். அவரது அறிவுரையின் பேரில், நீலகிரி முழுவதும் உள்ள கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வு (கம்யூனிட்டி விஜில்) என்ற முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்காக ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 கிராம ஊராட்சிகளில் ஊர் தலைவர்கள், சமுதாய தலைவர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள் தோறும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் யாரேனும் கிராமங்களில் இருந்து வெளியிடங்களுக்கு சென்று வந்தாலோ அல்லது வெளியூர்களில் இருந்து கிராமங்களுக்கு வந்தாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. வெளிமாவட்டம் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வருகிறவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்கிறார்களா அல்லது வெளியே சுற்றுகிறார்களா என்பதும் கண்காணிக்கப்படுகிறது. இந்தக் குழுக்கள் கொடுக்கும் தகவலின் பேரில் இ-பாஸ் இல்லாமல் நீலகிரிக்கு வருகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கிராமங்கள் தோறும் வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கை கழுவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நீலகிரியில் பாதிப்பு 150 ஆக அதிகரித்து உள்ளது. கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க கிராம ஊராட்சிகளில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குழுக்கள் அமைத்து, புதியதாக யாருக்கும் தொற்று ஏற்படாத வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரியை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற புதிய முயற்சியான சமூக விழிப்புணர்வு முறைக்கு கிராம மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
    Next Story
    ×