search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருள்சாமி-பாக்கியவதி(பழைய படம்)
    X
    அருள்சாமி-பாக்கியவதி(பழைய படம்)

    பிள்ளைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை

    ஊரடங்கால், வெளியூரில் உள்ள பிள்ளைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் தாயும், தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    திருவெண்காடு:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்சாமி (வயது 70). இவர், மீன் வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி பாக்கியவதி(65). இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன்களுக்கு திருமணமாகி சென்னையிலும், மகள்களுக்கு திருமணமாகி வெளியூரிலும் வசித்து வருகின்றனர். அருள்சாமி தனது மனைவியுடன் பெருந்தோட்டம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த தம்பதியினர், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் மகன்கள், மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை நேரில் சென்று பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்ததாக தெரிகிறது. இதேபோல் அவர்களும், பெற்றோரை பார்க்க பெருந்தோட்டம் கிராமத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனிமையில் இருந்த தம்பதியினர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்சாமி-பாக்கியவதி தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை இறந்து கிடந்த தம்பதியினரை பார்த்த அக்கம், பக்கத்தினர் திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×