என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    கொரோனா அறிகுறி இருந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் கொடுங்கள் - நாராயணசாமி வேண்டுகோள்

    பொதுமக்கள் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டால் புதுவை அரசு மருத்துவமனைக்கு தகவல் தர வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வந்த 16 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.

    இதில் 14 பேருக்கு பாதிப்பில்லை என வந்துள்ளது. மற்ற 2 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

    புதுவையில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை. தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசின் பல்வேறுதுறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினோம்.

    இந்த கூட்டத்தில் கொரோனாவை தடுப்பு நடவடிக்கை, விழிப்புணர்வு, சிகிச்சை தொடர்பாக விவாதித்துள்ளோம். முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாராளமாக கிடைப்பதற்காக வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    பொதுமக்கள் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டால் புதுவை அரசு மருத்துவமனைக்கு தகவல் தர வேண்டும். பள்ளி மாணவர்கள் எப்படி கைகழுவ வேண்டும் என பயிற்சி தருகிறோம். விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் எல்லையில் பரிசோதனை முகாம் அமைத்துள்ளோம். 3 அரசு டாக்டர்கள் டெல்லி சென்று கொரோனா வைரஸ் சிகிச்சை அளிப்பது தொடர்பாக பயிற்சி பெற்று வந்துள்ளனர். இந்த டாக்டர்கள் அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

    கொரோனா தடுப்பிற்கு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளோம். சீனாவில் மக்கள் நடமாட்டத்தை குறைத்ததின் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தினார்கள்.

    புதுவையிலும் மக்கள் பெரியளவில் கூடுவதை தவிர்க்கும்படி கூறியுள்ளோம். திருமணம் போன்ற விழாக்களில் கைகளை கழுவிவிட்டு பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    திருநள்ளாறு கோவிலுக்கு பல்வேறு மாநில பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் வருவதை தடுக்க முடியாது. நளன்தீர்த்த குளத்தில் குளிப்பதை தடை செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் கேபினட் அறையில் நடந்தது.

    கூட்டத்தில் அரசு செயலர்கள் அன்பரசு, சுர்பீர்சிங், அசோக்குமார், கலெக்டர் அருண், டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா, நகராட்சி ஆணையாளர்கள் கந்தசாமி, சிவக்குமார், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×