search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட ராஜேஸ்வரி கணவருடன் எடுத்து கொண்ட படம்.
    X
    கொலையுண்ட ராஜேஸ்வரி கணவருடன் எடுத்து கொண்ட படம்.

    நடத்தை சந்தேகம்: தலையில் கல்லை தூக்கிபோட்டு இளம்பெண் கொலை

    பண்ருட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண் தலையில் கல்லை தூக்கிபோட்டு கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேலு (வயது25) மெக்கானிக்காக உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.இவர்கள் பண்ருட்டி அன்வர்ஷா நகர் 4-வது தெருவில் வசித்து வந்தார்கள்.

    கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று இரவும் வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குமரவேல் ஆத்திரம் அடைந்து மனைவியை கொல்ல நினைத்தார்.

    இரவில் குழந்தைகள் தூங்கிய நேரத்தில் இரும்புகம்பியால ராஜேஸ்வரி தலையில் அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.

    ஆனால் குமரவேலுக்கு கோபம் தீரவில்லை. வீட்டில் கிடந்த ஆட்டு உரல் கல்லை எடுத்து ராஜேஸ்வரி தலையில் போட்டார். இதில் தலை சிதைந்து அவர் இறந்தார்.

    அதன்பின்னர் இரவோடு இரவாக குழந்தைகளை அழைத்து கொண்டு குமரவேலு அங்கிருந்து தலைமறை வாகி விட்டார்.

    இன்று காலை வீட்டில் இருந்து ரத்தம் வழிந்தோடியது. இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு தலை சிதைந்தபடி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ராஜேஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் கிடைத்தது.

    குமாரவேலு மெக்கானிக் தொழில் செய்து வந்ததோடு சொந்தமாக கார் ஓட்டி வருகிறார். இவர் அடிக்கடி இரவு நேரங்களில் வாடகைக்கு சவாரி செல்வார். அப்போது ராஜேஸ்வரி பல வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவரம் குமாரவேலுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் ராஜேஸ்வரி இந்த தொடர்பை விடவில்லை.

    காதலர் தினத்தன்று ராஜேஸ்வரி வெளியே சென்று வந்து உள்ளார். இந்த விவரம் தெரிய வரவே குமாரவேலு தனது மனைவி ராஜேஸ்வரியை மீண்டும் எச்சரித்தார். இதனால் வீட்டில் பிரச்சினை எழுந்தது. எனவே ராஜேஸ்வரியை கொன்று விட தீர்மானித்து  எண்ணத்தை நிறைவேற்றி உள்ளார்.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    குழந்தைகளுடன் தப்பி ஓடிய குமரவேலுவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×