search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    வேலூர் ஜெயிலில் செல்போன் சிக்கிய நிலையில் முருகன் அறையில் 2 சிம்கார்டு சிக்கியது

    வேலூர் ஜெயிலில் முருகன் அறையில் இருந்து செல்போன் சிக்கிய நிலையில் மேலும் 2 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார்.

    ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் முருகன்-நளினி சந்திப்பு உள்பட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு அவர் வக்கீல் தவிர வேறு யாரையும் சந்திக்க முடியாது. கடித போக்குவரத்து அனுமதி இல்லை.

    இதனையடுத்து முருகன் உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ள வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    முருகன் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த அறையில் நேற்று சிறைத்துறை தனிக்குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது 2 சிம்கார்டு, 1 சார்ஜர் சிக்கியது.இதுபற்றி பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் முருகன் அறையில் இருந்து மேலும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×