search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
    X
    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரி நிரம்பியது- சென்னைக்கு 51 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது

    கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து இன்று 51 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரிஉள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், நீர்வரத்து இல்லாததாலும் வீராணம் ஏரி நீர்மட்டம் குறையதொடங்கியது.

    கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு தண்ணீர் வந்தது.

    கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

    கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 2,000 கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. இன்று வடவாறு வழியாக 2,046 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வருகிறது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் 47.02 அடியாக உயர்ந்தது. ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரி நிரம்பியிருந்தபோது ஏரியில் இருந்து சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஏரியின் நீர்மட்டம் குறைந்தபோது சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் குறைந்துவந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் கூடும் போது சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

    நேற்று 46 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இன்று 51 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகளில் இருந்தும் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் நேற்று வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுகாக்களை சேர்ந்த 102 கிராமங்களில் மொத்தம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    காட்டுமன்னார் கோவில், ஸ்ரீமுஷ்ணம், வீராணம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்து இன்று 202 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.
    Next Story
    ×