search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீடு - (உள்படம்) கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதால் காயம் அடைந்த தெருநாய்
    X
    கொள்ளை நடந்த வீடு - (உள்படம்) கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதால் காயம் அடைந்த தெருநாய்

    ஈரோடு அருகே குரைத்த நாயை கத்தியால் குத்தி 62 பவுன் நகைகள் கொள்ளை

    ஈரோடு அருகே குரைத்த நாயை கத்தியால் குத்தி சாய்த்த கொள்ளையர்கள் வியாபாரி வீட்டு கதவை உடைத்து 62 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள ரகுபதி நாயக்கன்பாளையம் ரெயின்போ காலனியைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 42) இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகும்.

    ரகுபதிநாயக்கன் பாளையத்தில் அவர் கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் முத்துலட்சுமி (35) அஸ்வினி(19),அட்சயா(10) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் சண்முக ராஜாவின்தங்கை மகள் வெற்றி (19) என்பவரும் அங்குதங்கி கல்லூரியில் படித்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்த 5 பேரும் உள்ரூமில் படுத்து தூங்கினர். அந்த அறையில் ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் வீட்டு கதவை நைசாக உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பிறகு வீட்டில் இருந்த பீரோவையயும் திறந்தனர். உள்ளே சண்முகராஜா தனது மகளின் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 62 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். மேலும் பீரோவில் இருந்த19 ஆயிரம் பணத்தையும் எடுத்தனர்.

    பிறகு கொள்ளையர்கள் தங்கள் வந்த காரியம் முடிந்ததும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 2-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்ககூடும் என தெரிகிறது.

    அதிகாலை 4 மணியளவில் அவரது இளைய மகள் அட்சயா தண்ணீர்குடிக்க வந்தபோது கதவும், பீரோவும் திறந்து கிடந்ததை கண்டு சத்தம் போட்டார். அதன்பிறகுதான் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

    இதுபற்றி தகவல கிடைத்ததும் கொள்ளை நடந்த வீட்டுமுன் அப்பகுதி மக்கள் திரண்டனர். இதுகுறித்து ஈரோடு தாலூகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி வெளியே வந்து பூந்துறை ரோட்டில் சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளையர்களின் கைரேகையினை பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளையர்கள் வீட்டு கதவை உடைக்க முயன்ற போது இதை கண்ட ஒரு தெரு நாய் அங்கு ஓடி வந்தது. இந்த தெரு நாய்க்கு சண்முகராஜா வீட்டில் உள்ளவர்கள் சாப்பாடு போடுவார்கள்.

    இந்த விஸ்வாசத்தில் அந்த நாய் கொள்ளையர்களை பார்த்து குரைத்தது.

    இதை கண்ட ஒரு கொள்ளையன் அந்த நாயை கத்தியால் குத்தி உள்ளான். இதில் அந்த நாய் காயம் அடைந்தது. ஆனால் உயிர் தப்பித்து விட்டது.
    Next Story
    ×