என் மலர்
செய்திகள்

வேலூர் கோட்டை அருகே உள்ள சிப்பாய் புரட்சி நினைவுத்தூணில் கலெக்டர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காட்சி
இன்று 213-வது ஆண்டு அனுசரிப்பு: வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு நினைவஞ்சலி
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு 213-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
வேலூர்:
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆங்கிலேய படையில் பணியாற்றிய இந்திய வீரர்கள், கடந்த 1806-ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 10-ந் தேதி) வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நடத்தினர். இது, முதல் இந்திய சுதந்திர போர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றது.
சிப்பாய் புரட்சியில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு ஆண்டு தோறும் நினைவு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 213-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
வேலூர் கோட்டை எதிரே மக்கான் சந்திப்பில் உள்ள வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தூண் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு நடந்தது.
கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், லெப்டினன்ட் ராமகிருஷ்ணன், முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட முன்னாள் முப்படை அதிகாரிகள், பள்ளி, கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






