search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
    X

    கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

    கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 6 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அடல் டிங்கர் லேப் வசதி செய்து தரப்படும். மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை புதிய வண்ண சீருடைகள் படிப்படியாக வழங்கப்படும். 2017- 2018-ம் ஆண்டில் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினி 2 மாத காலத்தில் வழங்கப்படும்.



    இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் முதல் மாநிலமாக விளங்குகிறது. கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும். நிதி பற்றாக்குறை இருந்தாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளில் 72 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் கூடுதலாக 2 லட்சம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

    நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. இருந்த போதிலும், மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் 413 இடங்களில் இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 2 ஆயிரத்து 834 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் இருமொழி கொள்கையில் மாற்றம் இல்லை. தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் படிக்கும் 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கும் அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.

    2013-14-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் ஆசிரியர் பணியில் இல்லாத காரணத்தினால், மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×