search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியாறு, வைகை அணைகளில் கடந்த ஆண்டு இருப்பை விட தற்போது குறைவு
    X

    பெரியாறு, வைகை அணைகளில் கடந்த ஆண்டு இருப்பை விட தற்போது குறைவு

    மழை இல்லாததால் பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது.

    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த வாரம் ஓரிரு நாட்கள் மட்டும் மழை பெய்தது. வழக்கமாக மே முதல் வாரத்தில் இருந்தே மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும்.

    ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துகொண்டே சென்றது. இருந்தபோதும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 100 கன அடி வரை திறக்கப்பட்டு வைகை அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த தண்ணீரே தேனி, மதுரை மாவட்ட மக்களின் தற்போது கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 152 அடியில் கடந்த ஆண்டு இதே நாளில் 113.40 அடியாக இருந்தது. அணைக்கு 83 கன அடி தண்ணீர் வந்தது. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 1459 மி.கன அடி நீர் இருப்பு இருந்தது.

    ஆனால் இன்று அணையின் நீர்மட்டம் 112.15 அடியாக உள்ளது. வரத்து 7 கன அடியாகவும், திறப்பு 100 கன அடியாகவும், இருப்பு 1255 மி. கன அடியாகவும் உள்ளது.

    இதேபோல் 71 அடி உயரம் உள்ள வைகை அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 37.30 அடி நீர் இருந்தது. வரத்து 118 கன அடியாகவும், திறப்பு 60 கன அடியாவும் இருப்பு 750 மி. கன அடியாகவும் இருந்தது. இன்று வைகை அணையின் நீர்மட்டம் 36.44 அடியாக உள்ளது. நீர்வரத்து முற்றிலும் இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 693 மி. கன அடியாக உள்ளது.

    வழக்கமாக மழை தொடங்கும் காலம் தாமதமாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது.

    இதற்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் தற்போது அணையில் இருக்கும் தண்ணீர் குடிநீருக்கே பற்றாக்குறையாக இருப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

    Next Story
    ×