search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் 4 மணி நேரம் நிற்கவைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் - மாணவி பரபரப்பு புகார்
    X

    இன்ஸ்பெக்டர் 4 மணி நேரம் நிற்கவைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் - மாணவி பரபரப்பு புகார்

    போலீஸ் இன்ஸ்பெக்டர் 4 மணி நேரம் நிற்கவைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNPolice
    சென்னை:

    சென்னை சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஜெயகரன் வாசுதேவன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 17 வயதில் சிறுமி உள்ளார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு தாயின் 2-வது கணவரான ஜெயகரன் வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே ஜெயகரன் வாசுதேவன், ‘ஆன்லைன்’ மூலம் போலீசாருக்கு தனது மனைவி மோசடி செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக அப்போது புழல் போலீசில் இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜன் விசாரணை நடத்தினார். அவர், விசாரணைக்காக போலீஸ் நிலையம் வந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயும் தங்களுக்கு தொல்லை தரும் 2-வது கணவர் ஜெயகரன் வாசுதேவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நேற்று வழக்கு தெடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் வருகிற 10-ந்தேதி விசரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    கோர்ட்டில் சிறுமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விசாரணைக்காக சென்றபோது நீ அழகாக இருக்கிறாய் என்று இன்ஸ்பெக்டர் நடராஜன் என்னை அழைத்தார். நான் பயந்து தூரமாக நின்றேன். அப்போது என் கையை பிடித்து இழுத்தார். நான் சத்தம் போடுவேன் என்று கூறினேன். அதற்கு அவர் இது போலீஸ் ஸ்டேசன் யாரும் இங்கு வரமாட்டார்கள் என்றார். அப்போது ஜெயகரனும் பக்கத்தில் இருந்தார்.

    நான் அவமானத்தால் கண் கலங்கி உருகிப்போய் விட்டேன். அந்த இடத்திலேயே இறந்துவிடலாம் என்று தோன்றியது. நீயும் உன் அம்மாவைப் போல் இரண்டு, மூன்று திருமணம் செய்துகொள்ள ஆசையா? அதற்கு நான் ‘ஓகே’ வா என்று கூறி என்னை நான்கு மணி நேரம் நிற்க வைத்து உற்று பார்த்தார்.

    நான் கூறியதை போல் செய்தால் உன்னை மட்டும் விட்டுவிடுகின்றேன் என இரட்டை அர்த்தங்களினால் என்னிடம் ஆபாச வார்த்தைகளால் பேசினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 26.11.18 அன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில் சிறுமி கூறியிருப்பதாவது:-

    எனது தாய்க்கும் ஜெயகரன் என்பவருக்கும் கடந்த 5.10.2017 அன்று வடபழனி கோயிலில் 2-வது திருமணம் நடைபெற்றது. என் அம்மா மீது அன்பாக இருப்பதை போல் நடித்து எனக்கு அவர் பாலியல் ரீதியாக நிறைய துன்புறுத்தல்களை செய்து வந்தார். எனது சிறிய ஆடைகளை ஆன்லைனில் வாங்கிக் கொடுத்தார். என்னை தீய எண்ணத்துடன் பார்த்து வந்தார்.

    செல்போனில் ஆபாச படங்களையும் காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எனது தாயை அடிக்கவும், துன்புறுத்தவும் ஆரம்பித்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் மீது ஜெயகரன் வாசுதேவன் ஆன்லைனில் புகார் செய்திருப்பதாகவும் அதனால் எங்களை விசாரணைக்கு வரவேண்டும் என்று என்னையும், எனது தாயையும் இன்ஸ்பெக்டர் நடராஜன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார்.

    அப்போது அவர் இரட்டை அர்த்தங்களினால் என்னிடம் ஆபாச வார்த்தைகள் பேசினார். நான் அழுத போதும் என்னை விடவில்லை. என்னையும் தாயையும் மாலை 6.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் சட்டத்துக்கு முரணாக வைத்தார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் நடராஜன் தற்போது வேறு ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. #TNPolice
    Next Story
    ×