search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழி அருகே காதில் வி‌ஷத்தை ஊற்றி மனைவியை கொன்ற மீனவர்
    X

    சீர்காழி அருகே காதில் வி‌ஷத்தை ஊற்றி மனைவியை கொன்ற மீனவர்

    மனைவியின் காதில் வி‌ஷம் ஊற்றி மீனவர் கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது55). மீனவர் இவருடைய முதல் மனைவி மல்லிகா 2004- ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானார். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 2005-ம் ஆண்டு ஆறுமுகம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்த செல்வி(40) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக செல்வி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி ஆறுமுகத்துக்கும் செல்விக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் நோயால் அவதிப்படும் உனக்கு என்னால் அடிக்கடி மருத்துவச் செலவு செய்ய முடியாது என கூறி செல்வியின் காதில் வி‌ஷத்தை ஊற்றி விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதில் உயிருக்கு போராடிய செல்வியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர். மனைவியின் காதில் வி‌ஷம் ஊற்றி மீனவர் கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×