search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை உயிருடன் எரித்து கொன்ற மனைவி
    X

    குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை உயிருடன் எரித்து கொன்ற மனைவி

    செந்துறை அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் உறவினர்களுடன் சேர்ந்து கணவரை உயிருடன் எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 44), விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (40). இந்த தம்பதிக்கு மணிகண்டன் (19) என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான குணசேகரன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அத்துடன் மது போதையில் கிராம மக்களிடமும் தகராறு செய்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்த போதெல்லாம் அவரையும் அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று மாலை செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்ற குணசேகரன் அங்கும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மாமனாருக்கு சொந்தமான வைக்கோல் போருக்கு தீ வைத்துவிட்டு தனது ஊருக்கு வந்துவிட்டார்.

    இதுபற்றி அறிந்த மாமனார் தனது மகள் மஞ்சுளாவுக்கு போனில் தெரிவித்துள்ளார். அத்துடன் நக்கம்பாடி கிராமத்தில் உள்ள மஞ்சுளாவின் உறவினர்கள் மத்துமடக்கி கிராமத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் மஞ்சுளாவுடன் சேர்ந்து மது போதையில் இருந்த குணசேகரனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார்.

    பின்னர் மஞ்சுளாவின் உறவினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். தொடர்ந்து கணவர் அருகில் சென்ற மஞ்சுளா, அவர் அசைவற்று கிடந்ததால் இறந்துவிட்டதாக நினைத்தார். மேலும் இந்த சம்பவத்தில் தனக்கு தொடர் பில்லாதது போல் காட்டிக் கொள்ளவும் முயன்றுள்ளார். அதற்காக கணவரின் உடலில் இருந்த காயங்களின் மீது மஞ்சள் பொடியை தூவியுள்ளார்.

    பின்னர் கணவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்காக உயிருடன் இருந்த கணவர் குணசேகரன் உடல் மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்தார். அலறித்துடித்த குணசேகரன் சிறிது நேரத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் நடந்ததை மஞ்சுளா கூறினார். ஊர் மக்களிடமும் குணசேகரன் தகராறு செய்து தொல்லை கொடுத்து வந்ததால் அவர்களும் மஞ்சுளாவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையடுத்து இரவோடு இரவாக குணசேகரனின் உடலை அப்புறப்படுத்தி அங்குள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.


    கொலையுண்ட குணசேகரனின் உடலை போலீசுக்கு தெரியாமல் தகனம் செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகள்

    அங்கு கட்டைகளை அடுக்கி தகனம் செய்ய முயன்றனர். இதுபற்றி தகவல் கிடைத்த குணசேகரனின் நெருங்கிய உறவினரான பழமலை என்பவர் இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா கொலையுண்ட குணசேகரனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் மஞ்சுளா மற்றும் அவரது உறவினர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    Next Story
    ×