search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது

    மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.
    கோவை:

    கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. தொழிலாளி. இவரது மனைவி சிந்து (வயது 26). இவர்களுக்கு கடந்த 1¾ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதையடுத்து சிந்து கர்ப்பமானார். 3-வது மாதம் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். டாக்டர்கள் ஸ்கேன் செய்த போது அவருக்கு 3 கருக்கள் இருப்பதை கண்டு பிடித்தனர்.

    பின்னர் டாக்டர்கள் அவருக்கு சத்து மாத்திரைகள் வழங்கி உணவு சாப்பிடும் முறை குறித்து ஆலோசனை கூறினர். இதைத்தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியான சிந்து கடந்த 2-ந் தேதி பிரசவத்துக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பிரசவ வலியால் துடித்த சிந்துவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக 4 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், நேற்று சிந்துவுக்கு சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர்.

    காலை 9.23 மணியளவில் சிந்துவுக்கு அழகான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

    அதில், 2 பெண் குழந்தைகள் தலா 1¾ கிலோ எடையும், ஒரு குழந்தை 1½ கிலோ எடையுடன் இருந்தது. தாய் மற்றும் குழந்தைகள் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    மகளிர் தினத்தன்று பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் நல்ல முறையில் பிறந்ததால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

    இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் தற்போது 3 குழந்தைகள் பிறந்து உள்ளது. அந்த பெண்ணுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

    இது குறித்து அந்த குழந்தைகளின் தந்தை சுரேஷ்பாபு கூறும்போது,

    மகளிர் தினத்தன்று ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் மிகவும் ஏழையான நான் 3 பெண் குழந்தைகளையும் எப்படி வளர்க்கப்போகிறேன் என்று தெரியவில்லை. எனவே அரசு எனக்கு உதவ வேண்டும் என்றார். #tamilnews
    Next Story
    ×