search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.

    பாராளுமன்ற தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் வரும் - எடப்பாடி பழனிசாமி

    பாராளுமன்ற தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் வர உள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம், அரூர் ரவுண்டானாவில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின், 71-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமை தலைமை தாங்கினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

    2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு பிரச்சினைகள் இருந்தன. தி.மு.க. ஆட்சியில் போதிய மின்சாரம் இல்லாததால், தமிழகத்தில் தொழில்கள் முடங்கின. விவசாய பணிகள் நலிவடைந்தன.

    தமிழக மக்களின் துன்பங்களை அறிந்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் 3 ஆண்டுகளில் மின்வெட்டு பிரச்சினைகள் இருக்காது என சட்டப் பேரவையில் உறுதி அளித்தார்.

    அதன் பிறகு தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தொழில் வளமும் பெருகியுள்ளது.

    கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வுகள் இருந்தன. ஆனால், இன்று அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வுகள் கட்டுப்பாட்டில் உள்ளது.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எந்த கிராமத்துக்கும் செல்லவில்லை. தற்போது, கிராமங்கள்தோறும் சென்று ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தியும், மக்கள் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

    தற்போது ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் அ.தி.மு.க. அரசு என்ன செய்தது என்று கேட்கிறார். தி.மு.க. ஆட்சியில் செய்யாத திட்டங்களை நாம் செய்து வருகிறோம்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியில் இருக்கும் போது இது போன்று மக்களை சந்தித்து மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டிருக்கலாம்.

    விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதால் விவசாயப் பணிகளுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகள் தூர்வாரப்படுகிறது. அதேபோல், ஆறுகள், ஓடைகளின் குறுக்கே அதிக அளவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைநீர் சேமிக்கும் பணிகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கிராமப் பகுதிகளில் அதிக அளவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவ காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது. இந்திய அளவில் தமிழகம் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று விருது பெற்றுள்ளோம்.

    ஆனால் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொதுமக்களிடம் பொய்பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையிலும், 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

    ஏப்ரல் மாதம் பாராளுமன்ற பொதுதேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுடன் 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தலும் வர உள்ளது. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் விருப்பப்படி பா.ஜனதா, பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்துள்ளோம். அ.தி.மு.க,. பா.ம.க., பா.ஜனதா உழைப்பை விரும்பும் கட்சிகள். இதனை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் விமர்சிக்கிறார்.

    தமிழகம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நாட்டின் பாதுகாப்பு அவசியம். அதற்கு நிலையான அரசு வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவுடன் இணைந்துள்ளோம். நாட்டை ஆள திறமையானவர் மோடிதான்.

    தி.மு.க., மத்திய மாநில ஆட்சியில் அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தார்கள்? ஒன்றுமே செய்யவில்லை. அவர்களது குடும்பத்திற்கு பலன் ஏற்படுத்தி கொண்டனர்.

    ஆனால் அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் காவிரி பிரச்சினைக்காக பாராளுமன்றத்தையே 23 நாட்கள் முடக்கினர். தி.மு.க. எம்.பி.க்கள் என்ன செய்தனர். தனது குடும்பத்தினர் நலனுக்காகதான் கருணாநிதி டெல்லி சென்றார். தற்போது கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினும் மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு வாரிசு அரசியலை நடத்திவருகிறார்.

    அ.தி.மு.க.வில் யார் உழைக்கிறார்களோ அவர்களது வீட்டைதேடி பதவி வரும். ஜெயலலிதாவின் ஆணையை ஏற்று உழைத்த தொண்டர்கள் மூலம் வெற்றிபெற்ற அரூர் தொகுதி முருகன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பழனியப்பன் ஆகியோர் துரோகம் செய்து துரோகி டி.டி.வி. தினகரனுடன் சென்றுவிட்டனர்.

    டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அவருடன் சென்றவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். வரும் இடைதேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பிலோ, கூட்டணி சார்பிலோ போட்டியிடுபவர்களை வெற்றிபெற செய்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    அ.தி.மு.வுடன் பா.ம.க.வுடன் கூட்டணி சேரலாமா என்றும் உங்களுக்கு சூடு, சொரணை இல்லையா என்றும் ஸ்டாலின் கேட்கிறார். தி.மு.க.வை வைகோ கடுமையாக சாடினார். இப்போது அவர் உங்களுடன் கூட்டு சேரவில்லையா?

    இவ்வாறு அவர் பேசினார்.  #EdappadiPalaniswami




    Next Story
    ×