என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்து கோவில் பூசாரி பலி
    X

    பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்து கோவில் பூசாரி பலி

    பெருந்துறை அருகே இன்று காலை கிணற்றில் தவறி விழுந்து கோவில் பூசாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி தோட்டாணி சத்திரத்தை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது74). கோவில் பூசாரி.

    தோட்டாணி சத்திரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்தார். இன்று காலை அந்த கோவிலில் கோ பூஜை நடந்தது. இதில் சீனிவாசன் கலந்து கொண்டு பூஜை செய்தார். பிறகு கோவில் கிணற்றில் மீண்டும் ஒரு தடவை குளிப்பதற்காக கயிறு மூலம் தண்ணீர் இரைத்துக் கொண்டிருந்தார்.

    கயிற்றை மேலே தூக்க எட்டிப்பார்த்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். 60 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் இருந்தது.

    கிணற்றுக்குள் விழுந்த சீனிவாசன் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    பொது மக்கள் கிணற்றில் இறங்கி சீனிவாசனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

    தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சீனிவாசன் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி உருக்கமாக இருந்தது.

    பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×