search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சிராயப்பாளையம் அருகே 3 பெண்களை கட்டிபோட்டு நகை-பணம் கொள்ளை
    X

    கச்சிராயப்பாளையம் அருகே 3 பெண்களை கட்டிபோட்டு நகை-பணம் கொள்ளை

    கச்சிராயப்பாளையம் அருகே நேற்று இரவு 3 பெண்களை கட்டிபோட்டு நகை மற்றும் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள சிவகங்கை கிராமம் காட்டுகொட்டகையை சேர்ந்தவர் செம்மலை (வயது 45). இவரது மனைவி செல்வி (40). இவர்களுக்கு செவ்வந்தி (18) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு செம்மலை வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். செல்வி தனது மகள் செவ்வந்தி மற்றும் செம்மலையின் தாயார் அங்கம்மாள் (70) ஆகியோர் ஊரில் ஒதுக்குபுறத்தில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் செல்வி மற்றும் மகள் செவ்வந்தி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் திபு.. திபு.. வென்று புகுந்தனர்.

    அவர்கள் முகத்தை துணியால் மூடி இருந்தனர். வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்ததை பார்த்ததும் தாய், மகளும் கூச்சல்போட்டு அலறினர். அவர்களின் சத்தத்தை கேட்ட வீட்டின் மற்றொரு அறையில் இருந்த அங்கம்மாளும் வந்தார்.

    பின்னர் முகமூடி கொள்ளையர்கள் செல்வி, செவ்வந்தி, அங்கம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்பு அவர்களது கை, கால்களை கயிற்றால் கட்டி ஒரு அறையில் தள்ளினர். அதன்பின்பு கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை எடுத்து வீசினர். பின்பு அங்கிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இன்று காலை செல்வியின் வீட்டு கதவு திறந்து இருந்து வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் செல்வியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு ஒரு அறையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் செல்வி, செவ்வந்தி, அங்கம்மாள் ஆகியோர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.


    உடனே கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்தனர். அப்போது செல்வி கண்ணீர் மல்க கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து தாக்கி நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்றார்.

    இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு வெளியே சென்று நின்றது. வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை-பணம் கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×