search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை தபால் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
    X

    துணை தபால் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

    வாடிக்கையாளர்களின் சேமிப்பு பணத்தை கையாடல் செய்த வழக்கில் துணை தபால் அதிகாரிக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. #CuddaloreCourt
    கடலூர்:

    கடலூர் அஞ்சல் கோட்டம் வில்வராயநத்தம் துணை தபால் அலுவலகத்தில் ஆரோக்கியராஜ் என்பவர் கடந்த 27-4-2005 அன்று முதல் 13-4-2007 வரை துணை தபால் அதிகாரியாக பணியாற்றினார்.

    இவர் பணிபுரிந்த காலத்தில் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களான கிரிஜா என்பவரின் கணக்கில் இருந்து 13 ஆயிரத்து 100 ரூபாயையும், வஞ்சனவள்ளி என்பவரின் சேமிப்பு கணக்கில் இருந்து 5 ஆயிரத்து 400 ரூபாயையும், ஜெயலட்சுமி என்பவரின் தொடர் வைப்புநிதி கணக்கில் இருந்து 4 ஆயிரம் ரூபாயையும் சம்பந்தப்பட்டவர்களின் கையெழுத்தைப்போல் போலி கையெழுத்து போட்டு கையாடல் செய்தார்.

    இது தொடர்பாக உதவி தபால் கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் கொடுத்த புகாரின் பேரில் ஆரோக்கியராஜ் மீது கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு அன்வர் சதாத் விசாரித்தார். இதில் ஆரோக்கியராஜ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 409-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 420-வது பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், 467-வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 471-வது பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு அன்வர்சதாத் தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு 9 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு அன்வர் சதாத் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகேசன் ஆஜராகி வாதாடினார். #CuddaloreCourt
    Next Story
    ×