search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஜித் ரசிகர்கள்.
    X
    திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அஜித் ரசிகர்கள்.

    பால் அபிஷேகம் செய்தபோது கட்-அவுட் சரிந்து விழுந்து அஜித் ரசிகர்கள் படுகாயம்

    திருக்கோவிலூரில் பால் அபிஷேகம் செய்தபோது கட்-அவுட் சரிந்து விழுந்ததில் அஜித் ரசிகர்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். #Ajithfans
    திருக்கோவிலூர்:

    நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனையொட்டி தியேட்டர் முன்பு அஜித் ரசிகர்கள் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் கட்டி இருந்தனர். இன்று திரைப்படம் ரிலீஸ் ஆனதையொட்டி ரசிகர்கள் ஏராளமானோர் தியேட்டர் முன்பு குவிந்தனர்.

    காலை சுமார் 7.30 மணியளவில் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித் கட் அவுட் மீது ஏறி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது எதிர்பாராத வகையில் கட் அவுட் கீழே சரிந்து விழுந்தது. இதில் அஜித் ரசிகர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முத்தரசன், அருள், பிரதாப், பிரபாகரன் ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    உடன் தியேட்டர் முன்பு கூடியிருந்த ரசிகர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த பிரதாப், முத்தரசன், ஸ்ரீதர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் ரசிகர்கள் திரையரங்கிற்குள் சென்றதும் படம் திரையிடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  #Ajithfans



    Next Story
    ×