search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்
    X

    எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்

    அரசு மருத்துவக்கல்லூரி டீன் வழக்கு விசாரணைக்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்று விட்டதால், எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. #HIVBlood
    மதுரை:

    எச்.ஐ.வி. பாதிப்பால் வி‌ஷம் குடித்து இறந்த வாலிபரின் உடல் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று வெளிமாவட்ட டாக்டர்களால் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் வீடியோவில் அதனை பதிவு செய்யும் பணிக்கான ஏற்பாடுகள் முடிவடையாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் தானமாக வழங்கிய ரத்தம், விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டது. இதனால் அந்த பெண் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளானார்.

    இதனால் மன வேதனை அடைந்த வாலிபர், எலி மருந்து (வி‌ஷம்) குடித்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 30-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.

    அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் வெளிமாவட்ட அரசு டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வாலிபரின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை மதுரை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஏற்க மறுத்ததால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருநெல்வேலி, தேனி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றின் 2 மருத்துவ நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டனர். மேலும் அதனை வீடியோவில் பதிவு செய்யவும் உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தடயவியல் துறை பேராசிரியர்கள் அருண்குமார், சந்திரசேகர் ஆகியோர் மதுரை வந்தனர். அவர்களுடன் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜூலியானா, சதாசிவம் ஆகியோரும் பிரேத பரிசோதனை செய்ய தயாரானார்கள்.

    இந்த சூழலில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன், வழக்கு விசாரணைக்காக மதுரை ஐகோர்ட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாகவும் வீடியோ ஒளிப்பதிவுக்கான பணிகள் முடிவடையாததாலும் பிரேத பரிசோதனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த சிக்கல் காரணமாக எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான வாலிபரின் உடல் இன்று பிற்பகலில் பிரேத பரிசோதனை செய்யப்படக்கூடும் என மருத்துவ வட்டாரம் தெரிவித்தது. #HIVBlood

    Next Story
    ×