search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு வகுப்புக்கு சென்ற பிளஸ் 1 மாணவி 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
    X

    சிறப்பு வகுப்புக்கு சென்ற பிளஸ் 1 மாணவி 3வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

    ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்புக்கு சென்ற பிளஸ்-1 மாணவி மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்கோவில் கிராமத்தை சேர்ந்த கங்கைஅமரன் மகள் மகாலெட்சுமி (வயது15). ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    அரையாண்டு தேர்வு விடுமுறை தினத்தையொட்டி பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    மாணவி மகாலெட்சுமி இன்று காலை சிறப்பு வகுப்பில் பங்கேற்க பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். 2-வது மாடியில் உள்ள அவரது வகுப்பறைக்கு சென்றார் காலை 9.30 மணிக்கு மாணவி திடீரென 3-வது மாடிக்கு சென்றார்.

    அங்கு சென்ற அவர் மாடியில் இருந்து திடீரென விழுந்தார். இதில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் ஓடிவந்தனர். அவர்கள் மாணவி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    மாணவியின் பெற்றோர் ஆலங்காயம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் உறவினர்கள் பள்ளியில் குவிந்தனர். அவர்கள் மாணவியின் உடலை கண்டு கதறி அழுதனர்.

    ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து போலீசார், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×