search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த இசக்கிமுத்து
    X
    தற்கொலை செய்த இசக்கிமுத்து

    பாளை சிறையில் கைதி தற்கொலை

    பாளை மத்திய சிறை வளாகத்தில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நெல்லை:

    ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 27). கூலித் தொழிலாளியான இவருக்கும், சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும் (21) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    ஆனந்திக்கு சில நாட்களுக்கு முன்பு நடுக்கல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, கடந்த வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் ஆனந்தி சீதபற்பநல்லூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து குழந்தையை பார்க்க சென்ற இசக்கிமுத்து, குழந்தையுடன் ஆனந்தியை அய்யனார்குளம் வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இசக்கிமுத்து குடிபோதையில் இருந்ததால், மாமியார் முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இசக்கிமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கிமுத்து சீதபற்பநல்லூரில் உள்ள மனைவி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். அதிகாலையில் ஆனந்தி எழுந்து பார்த்தபோது, தொட்டிலில் இருந்த குழந்தையையும், இசக்கிமுத்துவையும் காணவில்லை.

    இது குறித்து ஆனந்தி புகாரின்பேரில் சீதபற்பநல்லூர் போலீசார் இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் குழந்தையை இசக்கிமுத்து இரவில் தூக்கிச் சென்று சீதபற்பநல்லூரில் உள்ள குளத்தில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை வீசிய இடத்தை இசக்கிமுத்து அடையாளம் காட்டவே, அங்கு தண்ணீருக்குள் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இசக்கிமுத்துவை சிறையில் அடைத்த நாள் முதல் அவர் மனநிலை சரி இல்லாதவர் போல் சிறை வளாகத்தில் சுற்றி வந்துள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் இன்று காலை சிறை வளாகத்தில் இசக்கிமுத்து நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் கையில் வைத்திருந்த டவலால் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற சிறைத்துறையினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

    இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை வளாகத்தில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×