search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கிராம மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #sterliteplant

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து. இதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பாக அமைக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்தனர்.

    இதன்பிறகு சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கு தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று வலியுறுத்தி பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பதிலுக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரியும் லாரி அசோசியேசன் உள்ளிட்ட அமைப்புகள், பெண்கள் மனு கொடுத்தனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராம மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரின் மையப்பகுதியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக போராட்ட குழுவை சேர்ந்த வக்கீல் அரிராகவன் மற்றும் பண்டாரம்பட்டி பகுதி பெண்கள் கூறுகையில்," மேகதாது அணை பிரச்சினையில் தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றுவது போல் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எம்.எல்.ஏக்கள், அனைத்து தலைவர்களையும் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். எனவே தூத்துக்குடி மக்களை பாதுகாக்க தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவேண்டும்" என்றனர்.  #sterliteplant 

    Next Story
    ×