search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை கல்லூரியில் மாணவர் படுகொலை - 3 பேர் கைது
    X

    கோவை கல்லூரியில் மாணவர் படுகொலை - 3 பேர் கைது

    கோவை கல்லூரியில் நடந்த மோதலில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். #Coimbatore #CollegeStudent
    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டி அருகே ஒரே வளாகத்தில் இந்துஸ்தான் என்ஜினீயரிங் கல்லூரி, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகள் உள்ளன.

    இதில் என்ஜினீயரிங் கல்லூரி தன்னாட்சி நிர்வாகம் பெற்றது. மற்றொரு கல்லூரி அண்ணா பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டது ஆகும். இந்த கல்லூரிகளில் தங்கள் கல்லூரி தான் சிறந்தது என்று முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    விடுமுறை நாளான நேற்று விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் சிலர் கேன்டீனுக்கு சாப்பிட சென்றனர். அப்போது மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது.

    இதில் திருச்சி குளித்தலை அண்ணாநகரை சேர்ந்த ஆரிப் அகமது கான் என்பவரின் மகன் அஸ்ரப் முகமது (18) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். இதைப்பார்த்து அவரது நண்பர்கள் கதறினர். உடனே விடுதி மாணவர்கள் அங்கு திரண்டனர்.

    அவர்கள் அஸ்ரப் முகமதுவை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.



    இதுதொடர்பாக அஸ்ரப் முகமதுவின் நண்பர் கவுசிக் செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பி.டெக். ஐ.டி. பிரிவில் முதலாமாண்டு படிக்கும் மதுரை செங்கோல் நகரை சேர்ந்த தினகரன்(19), ஏரோநாட்டிக்கல் பிரிவில் முதலாமாண்டு படிக்கும் நீலகிரியை சேர்ந்த நிதீஷ் குமார்(19), பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் முதலாமாண்டு படிக்கும் சிவகங்கையை சேர்ந்த சரவணகுமார்(19) ஆகிய 3 மாணவர்களை கைது செய்தனர்.

    கைதான மாணவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    கல்லூரியில் படிக்கும் தவுபிக் என்பவர் நேற்று தினகரனின் நண்பரிடம் கல்லூரியில் தினகரன் தான் பெரிய ஆளாமே, அவரை எல்லோரும் தீனா என்று தான் அழைப்பார்களாமே என கிண்டலாக கேட்டதோடு, தினகரனின் போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்புமாறு கூறி உள்ளார்.

    இதையறிந்த தினகரன் தனது நண்பர்களுடன் சென்று தவுபிக்கிடம் கேட்ட போது தான் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அஸ்ரப் அகமது, தினகரனிடம் உன்னை பற்றி புகார் செய்து கல்லூரியை விட்டே நீக்க வைக்கிறேன் பார் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தினகரன் கத்தியால் குத்தியதில் அஸ்ரப் முகமது இறந்துள்ளார்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இவர்கள் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் கைதான மாணவர்கள் தரப்பை சேர்ந்த விஷ்ணுபிரசாத் என்பவரும் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதன்பேரில் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். #Coimbatore #CollegeStudent
    Next Story
    ×