search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளிக்குடியில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை அறுத்து பெண் கொலை- கள்ளக்காதலன் வெறிச்செயல்
    X

    கள்ளிக்குடியில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கழுத்தை அறுத்து பெண் கொலை- கள்ளக்காதலன் வெறிச்செயல்

    ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை, கள்ளக்காதலன் கழுதை அறுத்து கொலை செய்தார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது பேய்க்குளம் கிராமம். இங்குள்ள சோளக் காட்டில் இன்று பிற்பகல் அந்தப்பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றனர்.

    அப்போது சோளக்காட்டு நடுவே 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் பெண்ணின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது அதே கிராமத்தைச் சேர்ந்த ஜோதி (வயது 35) என தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    பேய்க்குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜோதி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

    அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (50) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

    இந்த தகவல் முருகனுக்கு தெரியவரவே, ஜோதியை கண்டித்துள்ளார். மேலும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி ஜோதிக்கு அறிவுரை கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஜோதி ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள சோளக்காட்டுக்கு ஓட்டிச் சென்றார்.

    அப்போது அங்கு வந்த பெரியசாமி ஆசைக்கு இணங்குமாறு ஜோதியை வற்புறுத்தினார். ஆனால் அவரோ மறுத்து பெரியசாமியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கதிர் அரிவாளால் ஜோதியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் எதுவும் தெரியாதது போல் வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இந்த நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஜோதி வராதது கண்டு நேற்று இரவு முழுவதும் கணவர் மற்றும் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று சோளக்காட்டில் ஜோதி பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் பதுங்கி இருந்த பெரியசாமியை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×