search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும்- அன்புமணி ராமதாஸ்
    X

    ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும்- அன்புமணி ராமதாஸ்

    காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #HydroCarbonProject
    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்து நாட்டின் லங்காஷையர் மாவட்டத்திலுள்ள லிட்டில் பிளம்ப்டன் நகரில் பாறை எரிவாயு எடுப்பதற்காக பூமியைத் துளையிட்ட போது அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டாவில் அடுத்தடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இச்செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    இங்கிலாந்தில் இந்த அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ள நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன் 2016-ம் ஆண்டில் கனடாவில் இதைவிட அதிக சக்தி கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு பாறை எரிவாயு எடுக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தத் திட்டத்தால் ஏற்படும் ஆபத்தைக் கருதி தான் கடந்த அக்டோபர் 13-ம் தேதி உலகம் முழுவதும் பூமியை துளையிட்டு எரிவாயு எடுக்கும் முயற்சியை கண்டித்து சுற்றுச்சூழல் மற்றும் பசுமை அமைப்புகளின் சார்பில் அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    ஆனால், இதையெல்லாம் உணராமல் காவிரி பாசன மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தைக் கொண்டு நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களிலும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்துக்கு கடலில் 170 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    பழங்காலத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை நினைத்தாலே மிகவும் அச்சமாக உள்ளது.

    காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி காவிரி டெல்டா பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை மேற்கொண்டேன். நான் சந்தித்த லட்சக்கணக்கான மக்களில் ஒருவர் கூட அத்திட்டத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, அனைத்து மக்களுமே ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்; காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றனர்.

    பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்தும், காவிரி டெல்டா மக்களின் உணர்வுகளை மதித்தும் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #HydroCarbonProject
    Next Story
    ×