search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்வு
    X

    சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்வு

    நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு பெய்த மழையினால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து இன்று காலை 74.31 அடியாக உயர்ந்துள்ளது. #ServalarDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக ஆய்க்குடி, தென்காசி, சேர்வலாறு, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசியை அடுத்த ஆய்க்குடி பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மழைக்காக அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒதுங்கி நின்ற ஆனந்த் என்பவர் மின்னல் தாக்கி காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதே பகுதியில் மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலியாயின.

    தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த கால நிலை நிலவியது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளன. ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால் தற்போது இந்த அணைகளில் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு கூடுதலாக தண்ணீர் வருகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 104.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை பராமரிப்பு பணிக்காக நீர்மட்டம் வேகமாக குறைக்கப்பட்டது. தற்போது அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 51.34 அடியாக இருந்தது.

    இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து இன்று காலை 74.31 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.80 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 66 அடியாகவும், ராமநதி அணை 59.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.53 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 86.75 அடியாகவும் உள்ளன. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பிய நிலையில் உள்ளது.

    குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று கன மழை பெய்த‌து. இதனால் நேற்று மாலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்னீர் அதிகளவு விழுந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலை மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்தது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே புஷ்கர விழாவுக்காக நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ள வெளி மாநில பக்தர்கள் குற்றாலத்திலும் குளிக்க குவிந்துள்ளனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் நேற்று பெய்த கன மழையினால் அங்குள்ள தனியார் பள்ளியில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மழைநீர் வடிந்ததையடுத்து வகுப்புகள் நடந்தன.



    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் நேற்று மதியம் கன மழை பெய்தது. கயத்தாறில் பெய்த கன மழையினால் அங்குள்ள உப்பாற்று ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஆய்க்குடி-37.2, கயத்தாறு-35, சேர்வலாறு-28, தென்காசி 25.8, பாபநாசம்-22, சங்கரன்கோவில்-21, கோவில்பட்டி-11, மணிமுத்தாறு-8.8, கடனா அணை 8.2, சிவகிரி-7, அம்பை-6.6, கருப்பாநதி-6, செங்கோட்டை-5, ராமநதி அணை-4, குண்டாறு-3, அடவிநயினார் அணை-2, பாளை-2. #ServalarDam
    Next Story
    ×