என் மலர்
செய்திகள்

கோட்டூர்புரத்தில் ரவுடி வீட்டில் பதுக்கிய 27 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்
சென்னை:
கோட்டூர்புரம் பீலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யமஹா சீனிவாசன் (34). பிரபல ரவுடியான இவர் ‘பி’ பிரிவு ரவுடிகள் பட்டியலில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
யமஹா சீனிவாசனை கைது செய்வதற்காக கோட்டூர்புரம் போலீசார் நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் வீட்டில் அவர் இல்லை.
இதையடுத்து வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனையிட்டனர். மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பார்த்த போது அதற்குள் 27 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கைப்பற்றினார்கள்.
அந்த தோட்டாக்கள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல திண்டுக்கல் ரவுடி ஒருவரின் கூட்டாளியான திண்டுக்கல் ரவுடி ஒருவர் மும்பையில் தாதாவாக இருக்கிறார். கொலைகள் செய்வதில் கில்லாடியான அவர் கோவையில் நடைபெற்ற மூவர் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்.
இவரை மும்பை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். அவரிடம் விசாரித்த போதுதான் யமஹா சீனிவாசனை பற்றிய சில தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சென்னை போலீசார் யமஹா சீனிவாசனை தேடி வருகிறார்கள். #Rowdy #gunbullets