என் மலர்
செய்திகள்

கனமழை எதிரொலி - கோபியில் உள்ள அனைத்து குட்டைகளும் நிரம்பியது
கோபி:
ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு கனமழை கொட்டி தீர்த்தது.
அம்மாபேட்டை பகுதியில் மட்டும் 63 மி.மீ மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத் ஓடியது.
அடுத்தப்படியாக கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு மழை வெளுத்து கட்டியது.
இதையொட்டி கோபி பஸ் நிலையம் அருகே உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அப்பகுதி மக்களும் பயணிகளும் வேடிக்கை பார்த்தபடி சென்றனர்.
இந்த மழையால் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குட்டைகள் முழுவதும் நிரம்பி உள்ளது.
கோபி அருகே உள்ள கொளப்பலூர் குளம் 63 ஏக்கர் கொண்டது. கனமழையால் இந்த படர்ந்த குளமும் நிரம்பி வருகிறது. இன்னும் இரண்டொரு நாளில் இதேபோல் மழை பெய்தால் அந்த குளம் நிரம்பி விடும்.
தொடர் மழையால் கோபி பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோபியில் 58.2 மி.மீ மழை பெய்தது.
மேலும் இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் இரவு இடி-மின்னலுடன் மழை கொட்டியது. 30 மி.மீ மழை பெய்திருந்தது.
இதேபோல் பவானிசாகர், கொடுமுடி, வனப்பகுதியான தாளவாடி, நம்பியூர் மற்றும் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
இந்த கனமழையால் கோபி மற்றும் நம்பியூர் பகுதிகளில் 85 வீடுகளுக்குள் மழை தண்ணீர் புகுந்தது. அவற்றை பொதுமக்கள் வாரி வெளியே கொட்டினர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
அம்மாபேட்டை -63.4, கோபி -58.2, பவானிசாகர் -15.6, வரட்டுப்பள்ளம் -13.6, பவானி -8.6 கவுந்தப்பாடி -7 . #Rain






