search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள்
    X

    வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்களை தாக்கிய இலங்கை மீனவர்கள்

    வேதாரண்யம் அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர், மற்றும் இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கி இலங்கை மீனவர்கள் மீன்களை கடலில் வீசியும், வலைகளை அறுத்தும் சேதப்படுத்தினர்.

    தொடர்ந்து இதுபோல் இலங்கை கடற்படையினரும், மீனவர்களும் நடத்தி வரும் தாக்குதலை மத்திய- மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் நாகை மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கீழையூர் அருகே விழுந்த மாவடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் இளம்பரிதி.

    நேற்று மாலை 3 மணியளவில் இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் ராஜேந்திரன், காளிதாஸ், மணிமாறன், மற்றும் அக்கரைபேட்டையை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்த நிலையில் நள்ளிரவில் கோடியக்கரை தென் கிழக்கே நாகை மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அதிவேகமாக ஒரு விசைப்படகில் இலங்கை மீனவர்கள் சுமார் 10 பேர் வந்தனர். அவர்கள் திடீரென நாகை மீனவர்கள் படகை சுற்றி வளைத்து அதில் ஏறினர்.

    பின்னர் மீனவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி படகில் இருந்த மீன்களை கடலில் கொட்டினர். அப்போது மீனவர் ராஜேந்திரனை அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. மேலும் மீன்வலைகளை அரிவாளால் அறுத்தும், ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தினர்.

    பிறகு சிறிதுநேரத்தில் இலங்கை மீனவர்கள் தங்களது படகில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதையடுத்து நாகை மீனவர்கள் இன்று அதிகாலை படகில் கரை திரும்பினர். பின்னர் இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவத்தை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். இதனால் மீனவ கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.


    இலங்கை மீனவர்கள் தாக்குதலில் காயம் அடைந்த இளம்பரிதி, ராஜேந்திரன், காளிதாஸ், மணிமாறன், சக்திவேல் ஆகிய 5 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் பற்றி நாகை கடலோர காவல் படையினரிடமும் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அவர்கள் நாகை மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகை மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×