search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் மோசடியில் நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு
    X

    பணம் மோசடியில் நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளிப்பு

    குமாரபாளையம் அருகே பணம் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையம் முன்பு பெண் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குமாரபாளையம்:

    கோவை பீளமேடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் சேகர். இவரது மனைவி பார்வதி. இவர்களிடம் குமாரபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் கார் டிரைவராக வேலைப் பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் பார்வதிக்கும், கார் டிரைவர் ஈஸ்வரனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த சேகர் மனைவியிடம் தகராறு செய்து பிரிந்து சென்றுவிட்டார். இதனால் பார்வதி கோவையில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு குமாரபாளையம் சடையம் பாளையம் காந்தி நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கும் இருவரின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    அப்போது பார்வதியிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பணத்தை ஈஸ்வரன் வாங்கினார். சில நாட்களாக அவர் வீட்டுக்கு வராததால் பார்வதி பணத்தை திருப்பி கேட்டார். அவர் தர மறுத்ததால் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில், ஈஸ்வரன், அவரது அண்ணன் ஜம்பு மற்றும் ஈஸ்வரனின் மனைவி மலர்க்கொடி ஆகியோர் பார்வதியிடம் போலீசில் புகார் கொடுத்தது தொடர்பாக மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் வேதனையில் இருந்த பார்வதி நேற்று மாலை குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.

    போலீசார் தனது புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியபடி, தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடலில் தீப்பற்றி எரிந்தது. போலீசார், உடனடியாக அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பார்வதி பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    Next Story
    ×