search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய கார்.
    X
    விபத்தில் சிக்கிய கார்.

    மேலூர் அருகே விபத்து- அனல்மின் நிலைய அதிகாரி உள்பட 2 பேர் பலி

    மேலூரில் நடந்த விபத்தில் அனல் மின்நிலைய அதிகாரி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுதொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    நாகர்கோவில் நேசமணி நகரைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது55). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் (தெர்மல்) துணை பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.

    வேலை நிமித்தமாக நேற்று முன்தினம் நெய்வேலியில் நடந்த அதிகாரிகள் கூட்டத்திற்கு மோசஸ் தூத்துக்குடியில் இருந்து காரில் சென்றார்.

    அனல் மின்நிலையத்தில் வேலை பார்க்கும் டிரைவர் குமார் (49) காரை ஓட்டிச் சென்றார். இவர் தூத்துக்குடி தெர்மல் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை நெய்வேலி கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். நள்ளிரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில்கார் சென்டர்மீடியன் மீது மோதி மறுபுறம் உள்ள ரோட்டில் பாய்ந்தது. அப்போது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

    குமார்-மோசஸ்

    இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. அதில் இருந்த மோசஸ், குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி, போலீஸ்காரர் விவேக், சுங்கச்சாவடி விபத்து மீட்பு வாகன அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×