search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி
    X
    கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி

    வீராணம் ஏரி கரை உடையாமல் இருக்க நீர்மட்டம் 45.50 அடியாக குறைப்பு

    வீராணம் ஏரியின் கரைகள் உடையாமல் இருக்க நீர்மட்டம் 45.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது மாவட்டத்தின் முதன்மை நீர் ஆதாரமாக திகழ்கிறது. சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது.

    தற்போது கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து அங்கிருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவில் 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.80 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று குறைந்து 45.50 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியின் கரைகள் உடையாமல் இருக்க நீர்மட்டம் 45.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரியின் கரைகளின் பாதுகாப்பு கருதியும், தற்போது விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை இல்லை என்பதாலும் ஏரியின் நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது வீராணம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவான 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 972 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. #VeeranamLake
    Next Story
    ×