search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலியை பார்க்க வந்த சென்னை வாலிபர் தற்கொலை முயற்சி
    X

    கள்ளக்காதலியை பார்க்க வந்த சென்னை வாலிபர் தற்கொலை முயற்சி

    நாகர்கோவிலுக்கு கள்ளக்காதலியை பார்க்க வந்த சென்னை வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று ஒரு வாலிபர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் பற்றி வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் வாலிபரிடமும் விசாரித்தனர்.

    இதில், அந்த வாலிபர் சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 35) என தெரிய வந்தது. முருகனுக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் வீடு அருகே நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதி வாடகைக்கு தங்கியிருந்தனர். அந்த தம்பதியுடன் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் முருகன் நாகர்கோவில் பெண்ணுடன் நெருங்கி பழகினார். அடிக்கடி அவர்கள் தனியாக சந்தித்து பேசினர். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

    இந்த நிலையில் அந்த தம்பதி திடீரென சென்னை வீட்டை காலி செய்து விட்டு மீண்டும் நாகர்கோவில் சென்று விட்டனர். இது முருகனுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அவர், சென்னையில் இருந்து கள்ளக்காதலியை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர், செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.

    இதனால் மனம் உடைந்த முருகன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலியை தேடி நாகர்கோவில் வந்தார். வடசேரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று கள்ளக்காதலி வசிக்கும் பகுதிக்கு சென்று அவரது வீட்டை கண்டுபிடித்தார்.

    வீட்டிற்குள் செல்ல முயன்ற போது அந்த பெண் அவரை சந்திக்க மறுத்து வெளியே திருப்பி அனுப்பினார். மீண்டும் இங்கு வரக்கூடாது எனவும் எச்சரித்தார். இதன் காரணமாகவே முருகன் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    முருகன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வடசேரி போலீசார் சென்னை திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் மூலம் முருகனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டனர்.

    முருகனின் உறவினர்கள் வந்த பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வடசேரி போலீசார் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×