search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளிடம் பாலபாரதி கருத்து கேட்ட காட்சி.
    X
    விவசாயிகளிடம் பாலபாரதி கருத்து கேட்ட காட்சி.

    விவசாயிகளிடம் கருத்து கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கைது

    பாப்பிரெட்டிப்பட்டியில் போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளிடம் கருத்து கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமைச் சாலையானது ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இந்த பசுமை வழிச்சாலையானது தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக சுமார் 919.24 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது.

    பசுமை வழிச்சாலை அமைவதால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோம்பூர், காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்டுசாலை, கோட்டமேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

    போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்திப்பது தவறு என்று அரூர் டி.எஸ்.பி. செல்ல பாண்டியன் கூறினார். ஆனால் போலீஸ் தடையை மீறி தொடர்ந்து பாலபாரதி மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் விவசாயிகளிடம் கருத்து கேட்டனர். இதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலர் ஏ.குமார் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்றாலும் போலீசார் அவர்களை வேனில் ஏற்றி சென்றனர். இரவு அவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.

    சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச்சாலையால் மலைவாழ் பழங்குடியின மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது. பசுமை வழிச்சாலையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

    வருவாய்த்துறை சார்பில் விவசாயிகளிடமிருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பசுமை வழிச்சாலையை விவசாய நிலங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்கள் பாதிக்காத வகையில் மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்.

    பசுமை வழிச்சாலை குறித்து கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்வதை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலபாரதி கைதை கண்டித்து தருமபுரி, அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பாலபாரதி உள்பட 15 பேர் மீது எ.பள்ளிப்பட்டி போலீசார் இன்று காலை வழக்கு பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடுதல், பதட்டத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×