search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்

    கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் - எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது

    நாமக்கல்லில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று இரவு நாமக்கல்லுக்கு வருகை தந்த அவரை கலெக்டர் ஆசியா மரியம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் கவர்னர் இரவு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பயணியர் சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது மணிக்கூண்டு, அண்ணாசிலை அருகே தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன், மேற்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலு, நவலடி, மாநில துணை தலைவர் ராணி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமி, சரஸ்வதி, ராணா ஆனந்த் உள்பட பலர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    தி.மு.க.வினரின் கருப்பு கொடி போராட்டத்தின் மத்தியிலேயே சாலையில் திரண்டு இருந்த பொதுமக்களை நோக்கி கவர்னர் தனது கைகளை அசைத்தபடி காரில் சென்றார்.



    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கோ‌ஷம் எழுப்பினார்கள். அப்போது போலீஸ் அதிகாரிகள் சென்று, நீங்கள் அனுமதி பெறாமல் இங்கே ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள். கவர்னர் ஆய்வு செய்வதற்கு எதிராக கோ‌ஷம் எழுப்புகிறீர்கள். எனவே உங்களை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் கைது செய்கிறோம் என்றனர்.

    இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமான ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி, 31 பெண்கள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    மேலும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் இருக்கும் வகையில் கவர்னரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் போலீஸ் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றது. அதுபோல் கவர்னர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதையடுத்து நாமக்கல் பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை இந்தியா ரதம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜ், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., கலெக்டர் ஆசியாமரியம், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, அனைத்து துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கில் கவர்னரை வரவேற்கும் விதமாக நவதானியங்கள் கொண்டு பொம்மை உருவாக்கப்பட்டு இருந்தது.

    இந்த நவதானிய பொம்மையை பார்த்து கவர்னர் மகிழ்ச்சி அடைந்து, துறை ஊழியர்களை பாராட்டினார். பின்னர் தனியார் கல்லூரி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    பிற்பகலில் பயணியர் சுற்றுலா மாளிகையில் அவர் விவசாயிகள், பொதுமக்கள் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    மாலையில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகிறார்.
    Next Story
    ×