search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை பாண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் கச்சா எண்ணெய் பரவி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    மயிலாடுதுறை பாண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் கச்சா எண்ணெய் பரவி கிடப்பதை படத்தில் காணலாம்.

    ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் படலம் - பொதுமக்கள் அதிர்ச்சி

    மயிலாடுதுறை அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் வெளியேறிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #ONGC
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்திலும், அருகில் உள்ள பொன்னூர் கிராமத்திலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் 4 எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த 4 எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் பாண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மற்றொரு பிளாண்ட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒரே குழாய் மூலம் குத்தாலம் ஓ.என்.ஜி.சி. பிளாண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

    இந்த எண்ணெய் குழாய்கள் விளைநிலங்களில் புதைக்கப்பட்டு, அதன் மூலம் கச்சா எண்ணெய் பிளாண்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு விளைநிலத்தில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனை கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை(வயது 50), உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயின் வால்வை அடைத்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறாத வகையில் தடுத்து நிறுத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  #ONGC


    Next Story
    ×