search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி ஆணையத்தின் கூட்டத்தை இந்தமாத இறுதிக்குள் கூட்ட வேண்டும் - ராமதாஸ்
    X

    காவிரி ஆணையத்தின் கூட்டத்தை இந்தமாத இறுதிக்குள் கூட்ட வேண்டும் - ராமதாஸ்

    காவிரி ஆணையத்தின் கூட்டத்தை இந்தமாத இறுதிக்குள் கூட்ட வேண்டும் என்று பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #cauverymanagementboard #Ramadoss

    சென்னை:

    பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி விவகாரம் பற்றி பிரச்சினை எழுப்பி, காவிரி சிக்கலை தீர்ப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ஏதேனும் உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

    ஆனால், நிதி ஆயோக் கூட்டத்தில் காவிரி சிக்கல் பற்றி பெயரளவில் குறிப்பிட்டதுடன் நிறுத்திக் கொண்டார். டெல்லியில் பிரதமரை சந்தித்தாவது காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியை நிதி ஆயோக் கூட்டம் நடந்த அரங்கத்தில் நடந்து கொண்டே சந்திக்கும் வாய்ப்பு மட்டும் தான் முதல்வருக்கு கிடைத்தது.

    இந்தியாவின் முன்னணி மாநிலம் என்று ஆட்சியாளர்களால் அழைக்கப்படும் மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு காவிரி பிரச்சினை குறித்து பிரதமரை சந்தித்து பேச கடந்த 5 மாதங்களாக வாய்ப்பு மறுக்கப்படுவதும், நிகழ்ச்சி முடிந்து போகும் வழியில் பிரதமரை யாரோ ஒருவரைப் போல சந்தித்து பேசும் வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். அப்போது கிடைத்த வாய்ப்பில் கூட காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து முதலமைச்சர் எதுவும் பேசவில்லை.

    காவிரி மேலாண்மை ஆணையத்தை எப்படி யாவது முடக்கிவிட வேண்டும் என்று கர்நாடகம் துடிக்கிறது. கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என்பதில் தமிழகத்திற்கு பொறுப்பு இல்லை; மத்திய அரசுக்கு அக்கறையில்லை.


    இத்தகைய சூழலில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைப்பது குதிரைக் கொம்பாகவே அமையும். காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதவை. இவை தமிழகத்திற்கு எதிரான கூட்டுத் துரோகமாகும்.

    கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 104 டி.எம்.சி ஆகும்.

    அதில் பாதிக்கும் மேல், 56 டி.எம்.சி அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விடும் தண்ணீரின் அளவு ஒரு நாளுக்கு அரை டி.எம்.சி கூட இருக்காது. இது பெரும் அநீதி.

    கர்நாடக அணைகளில் கடந்த ஆண்டு இதே நாளில் இருந்ததை விட இப்போது 10 மடங்குக்கும் கூடுதலாக நீர் இருப்பு உள்ளது. ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பதிலிருந்தே நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதில்லை என்பது தெளிவாகிறது. கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெறுவது தமிழகத்தின் உரிமை.

    ஆனால், கர்நாடகமோ தமிழகத்திற்கு தண்ணீரை பிச்சை தருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடர அனுமதிக்கக் கூடாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு வடிவம் கொடுக்கப்படும் போது தான், இச்சிக்கலை ஓரளவாவது தீர்க்க முடியும்.

    எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகத்தின் சார்பிலான உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும். இம்மாத இறுதிக்குள் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டி, குறுவை பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #cauverymanagementboard #Ramadoss

    Next Story
    ×