search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் அதிபரை கட்டி போட்டு சொகுசு காரை கடத்திய கல்லூரி மாணவர் - 3 பேர் கைது
    X

    தொழில் அதிபரை கட்டி போட்டு சொகுசு காரை கடத்திய கல்லூரி மாணவர் - 3 பேர் கைது

    குமரியில் தொழில் அதிபரை கட்டி போட்டு சொகுசு காரை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி லீபுரம் கல்லுவிளை ஆஞ்சநேயர் நகரில் வசிப்பவர் ரவீந்திரன் நாயர் (வயது 78). கேரளாவைச் சேர்ந்த இவர் அங்கு கல்வி அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வுக்கு பின் மன அமைதிக்காக கன்னியாகுமரியில் வீடு கட்டி தங்கியிருந்தார். இவர் கேரளாவில் விடுதியும் நடத்தி வருகிறார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி மாலை 3 மணிக்கு ரவீந்திரன் ஆஞ்சநேயர் நகரில் உள்ள வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஒரு காரில் வந்து இறங்கினர். அவர்கள் ரவீந்திரன் நாயரிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரது வீட்டுக்குள் புகுந்தனர்.

    அந்த கும்பல் ரவீந்திரன் நாயரை கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க தேடினர். ஆனால் அவர்களிடம் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரவீந்திரன் நாயர் அணிந்திருந்த அரை பவுன் மோதிரம் மட்டுமே சிக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ரவீந்திரன் நாயரை கத்தியால் குத்திவிட்டு 4 வெற்று காசோலைகளில் அவரிடம் கையெழுத்து வாங்கினர். பின்னர் அவரை கயிற்றால் கட்டி போட்டு விட்டு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த ரவீந்திரன் நாயரின் சொகுசு காரை கடத்திச் சென்றனர்.

    அக்கம்பக்கத்தினர் ரவீந்திரன் நாயரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த துணிகர கொள்ளை தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வம் தலைமையிலான போலீசார் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தோவாளை தெற்கு தெருவைச் சேர்ந்த மனோஜ் (25), நாசரேத் கோவில் தெருவைச் சேர்ந்த பீம்சிங் (29), திருச்செந்தூர் அருகே உள்ள ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த செல்வபெருமாள் (28), சிதம்பரபுரம் தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (23) என்பது தெரியவந்தது.

    இவர்கள் 4 பேரும் ரவீந்திரன் நாயரை தாக்கி காரை கடத்திச் சென்றவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் பீம்சிங் கல்லூரி மாணவர் ஆவார். செல்வபெருமாள் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். மனோஜ் மருந்து விற்பனையாளராக பணிபுரிகிறார்.

    ரவீந்திரன் நாயர் வீட்டில் நடந்த கொள்ளைக்கு மனோஜ் தான் மூளையாக செயல்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் நடந்த ஒரு கருத்தரங்கில் ரவீந்திரன் நாயரை, மனோஜ் சந்தித்துள்ளார். அப்போது தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதை தெரிவித்து ரவீந்திரன் நாயர் மனோஜிடம் மருந்து கேட்டுள்ளார். இதையடுத்து மனோஜ், ரவீந்திரன் நாயர் வீட்டுக்கு அடிக்கடி சென்று மருந்துகள் வழங்கினார்.

    அப்போது ரவீந்திரன் நாயர் செல்வ செழிப்புடன் இருப்பதையும், தனியாக வசிப்பதையும் தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது திட்டப்படி தான் 7 பேர் சேர்ந்து இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த தகவல்களை மனோஜ் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார்.

    கடத்தப்பட்ட ரவீந்திரன் நாயரின் காரை அந்த கும்பல் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு விற்று அந்த பணத்தை பங்கு வைத்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மார்த்தாண்டம் சென்று அந்த காரை மீட்டனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

    Next Story
    ×