search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்.
    X
    பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்.

    கோவைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி-பில்லூர் அணை நிரம்புகிறது

    கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அணை நிரம்பி வருவதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கோவை:

    தொடர் மழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பி வருகிறது.

    நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

    கோவை மக்களின் நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை கேரள வன பகுதியில் உள்ளது.

    கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த அணையில் தற்போது 30.7 அடி தண்ணீர் உள்ளது. இன்னும் 19.3 அடி நீர் வந்தால் அணை முழுவதும் நிரம்பும்.

    வேகமாக நிரம்பி வரும் சிறுவாணி அணை

    சிறுவாணி அணை நிரம்பி வருவதால் கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை குற்றாலத்துக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள இரும்பு பாலம் வரை தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட உள்ளது. கோவை, நீலகிரி மாவட்ட எல்லை வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாகும். இந்த அணையில் தற்போது 97 அடி தண்ணீர் உள்ளது.

    அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் 5-வது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. பருவ மழை காரணமாக இந்த அணை கடந்த 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் பழைய, புதிய ஆயக்கட்டு, பாசனத்துக்கும் கேரளாவுக்கும் பகிர்ந்து வழங்கப்படும்.

    குரங்கு நீர் வீழ்ச்சியிலும் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பரம்பிக்குளம் அணையின் மொத்த நீர் மட்டம் 72 அடியாகும். தற்போது அணையில் 11.90 அடி நீர் உள்ளது.

    வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நீர் மட்டம் 160 அடியாகும். தற்போது பெய்த மழை காரணமாக இந்த அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் அணை நீர் மட்டம் 103.84 அடியாக உள்ளது. கடந்த 3 நாட்களில் 43 அடி உயர்ந்துள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணை நீர் மட்டம் 11.90 அடியாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணை நீர் மட்டம் உயர்ந்து உள்ளது.

    தற்போது அணையில் 63.32 அடி தண்ணீர் உள்ளது. திருமூர்த்தி அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள எமரால்டு அணை நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 184 அடியாகும். தற்போது 135 அடி தண்ணீர் உள்ளது.

    ஊட்டி பைக்காரா அணையில் தற்போதைய நிலவரப்படி 85 அடி தண்ணீர் இருக்கிறது. ரேலியா அணையில் 41.8 அடி தண்ணீர் உள்ளது.

    கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பேரூர் படித்துறையை தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் பேரூர் சொட்டையாண்டி குட்டை, சுண்ணாம்பு காலவாய் தடுப்பணை, செங்களம், நரசாம்பதி குளம், கோளராம்பதி குளம், நொய்யல் ஆற்றின் முதல் குளமான உக்குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி வருகிறது. ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அவைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

    Next Story
    ×