search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை- தினகரன் குற்றச்சாட்டு
    X

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை- தினகரன் குற்றச்சாட்டு

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து நலம் விசாரித்தார்.

    அதன்பிறகு சிறை வாசலில் நிருபர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவம் குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் வாய்சவடால் பேசுகிறார். ஆனால் இதுவரை அவர் தூத்துக்குடி பக்கமே போகவில்லை.

    நாங்கள் தூத்துக்குடியில் தெருத்தெருவாக சென்றோம். அதுபோல் அவரை போகச் சொல்லுங்கள் பார்ப்போம். 2 ஆயிரம் போலீசாரை கூட அழைத்து செல்ல சொல்லுங்கள். இறந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களிடம் ஆறுதல் சொல்லி விட்டு வரவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் இங்கேயே உட்கார்ந்து கொண்டுள்ளார்.

    18 சட்டமன்ற உறுப்பினர்களின் தீர்ப்பு விரைவில் வரப்போகிறது என்கிறீர்கள். முதலில் தீர்ப்பு வரட்டும் மற்றதை பார்க்கலாம்.

    நாங்கள் எங்கள் கட்சி அலுவலகத்தை ஜூன் 3-ந் தேதி திறந்ததற்கும், கருணாநிதி பிறந்தநாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    1988-ல் அம்மா ஆழ்வார்பேட்டை அசோக் தெருவில் கட்சி அலுவலகம் திறந்தபோது இப்படித்தான் எதிர் அணியில் இருந்தவர்கள் பேசினார்கள். அதுபோல இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இதுபோன்று பேசுகிறார்கள்.

    அசோக்நகரில் அலுவலகம் திறந்ததோடு கோட்டையையும் நாங்கள்தான் பிடிப்போம். அ.தி.மு.க. தலைமை கழகத்தையும் அம்மாவின் உண்மை தொண்டர்களாகிய நாங்கள் நிச்சயமாக மீட்டெடுப்போம்.

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என்று பார்த்தோம். அம்மா மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெற்றிவேல் வெளியிட்ட போது அவர் மீது வழக்கு தொடர்ந்தார்கள்.

    கடந்த வாரம் விசாரணை ஆணையத்தில் அம்மா பேச்சு அடங்கிய ஆடியோவை டாக்டர் சிவக்குமார் சமர்ப்பித்திருந்தார். அந்த ஆடியோவை ஆறுமுகசாமி ஆணையமே வெளியிடுகிறது.

    இந்த ஆடியோவை வெளியிட்டதற்கு என்ன காரணம்? இதற்கு யார் மீது வழக்கு தொடுப்பது? தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இதனை வெளியிட்டுள்ளனர். ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கமே இதுவரை தெரியவில்லை.

    இவ்வாறு தினகரன் கூறினார்.

    அப்போது அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் கே.எஸ்.வேதாச்சலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.  #TTVDhinakaran
    Next Story
    ×