search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அருகே கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்
    X

    மயிலாடுதுறை அருகே கணவர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்

    கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அண்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 48).

    இவர் கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரேகாவுக்கும் மேல பாதியைச் சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த கள்ளக்காதல் விவகாரம் அறிவழகனுக்கு தெரியவந்தது.

    இதனால் அவர் மனைவி ரேகாவை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து அறிவழகன் செம்பனார்கோவிலுக்கு வந்தார். வழக்கம் போல் கள்ளக்காதல் குறித்து மனைவியிடம் தகராறு செய்தார்.

    தொடர்ந்து கணவர் அறிவழகன் கள்ளக்காதலுக்கு இடையூறு செய்து வந்ததால் ரேகா ஆத்திரமடைந்தார். இதனால் கள்ளக்காதலன் ராஜசேகரை சந்தித்து கணவர் அறிவழகனை கொல்ல திட்டம் தீட்டினார். அதற்கு ராஜசேகரும் உடன் பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு அறிவழகன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி ரேகாவிடம் அவரது கள்ளக்காதல் குறித்து தரக்குறைவாக திட்டினார். பின்னர் சிறிது நேரம் பேசிய அறிவழகன் அப்படியே தூங்கி விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேகா, அறிவழகனை கொல்ல முடிவு செய்து கள்ளக்காதலன் ராஜசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் அங்கு வந்தார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த அறிவழகனை ராஜசேகரும், ரேகாவும் தலையணையால் அமுக்கினர். இதில் மூச்சு திணறி அறிவழகன் பரிதாபமாக இறந்தார்.

    இருவரும் மாரடைப்பால் அறிவழகன் இறந்ததாக கூறி உறவினர்களை நம்பவைத்து விடலாம் என்று திட்டம் போட்டனர். அதன்படி ரேகா, அறிவழகன் தூங்கும் போது மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் உறவினர்கள் இன்று காலை அறிவழகன் வீட்டுக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் ரேகா பேச்சில் சந்தேகம் அடைந்தனர். இதனால் அறிவழகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரேகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து கணவர் அறிவழகனை கொலை செய்து விட்டதாக கூறினார்.

    இதையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×