search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஸ்கட், குடிநீர் கொடுக்க சென்ற என்னை போலீசார் சுட்டனர்- காயமடைந்த பட்டதாரி பேட்டி
    X

    பிஸ்கட், குடிநீர் கொடுக்க சென்ற என்னை போலீசார் சுட்டனர்- காயமடைந்த பட்டதாரி பேட்டி

    தூத்துக்குடி போராட்டக்காரர்களுக்கு பிஸ்கட், குடிநீர் கொடுக்க சென்ற என்னை போலீசார் சுட்டனர் என்று காயமடைந்த பட்டதாரி வாலிபர் கூறினார்.#sterliteprotest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சந்தோஷ்ராஜ் கூறியதாவது:-

    நான் பி.காம். படித்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக நான் உள்பட எனது கல்லூரி நண்பர்கள் என 200 பேர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர், பிஸ்கட் இலவசமாக வழங்க முடிவு செய்தோம்.

    அதன்படி அன்று நாங்கள் 50 மூட்டை தண்ணீர் பாக்கெட், பிஸ்கட்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம். ஆனால் அங்கு கலவரம் வெடித்ததால் நாங்கள் தப்பி ஓடினோம். அப்போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் என் மீது குண்டு பாய்ந்து காயம் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டோ டிரைவர் மரியசெல்வன் மனைவி பொன்மாரி கூறியதாவது:-

    கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் அருகே நாங்கள் ஆட்டோவில் வந்துகொண்டு இருந்தோம். அப்போது, போலீசார் ஆட்டோவை வழிமறித்து என்னை தாக்க முயன்றனர். இதை எனது கணவர் தடுத்ததால் அவரை போலீசார் தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போலீசார் மக்களை தீவிரவாதி என்று கூறுகிறார்கள். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாகனத்திற்கு போலீசாரே தீவைத்து, கேமராக்களையும் உடைத்து உள்ளனர். பழியை எங்கள் மீது போடுகிறார்கள். பொதுமக்கள் யாரும் வாகனத்தை சேதப்படுத்தவில்லை. மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த போலீசார் கடுமையாக போராடியவர்களை குறிபார்த்து சுட்டனர். எனவே அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போலீசார் தான் தீவிரவாதிகள் போல் செயல்பட்டுள்ளனர். கலவரத்தின்போது, காணாமல்போனவர்களை கணக்கெடுத்து மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். வீடு வீடாக சென்று கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி குரூஸ்புரத்தை சேர்ந்த எபுலின் விக்டோரியா (43) கூறுகையில், ‘நான் கலெக்டர் அலுவலகத்தில் நுழைந்தபோது போலீசார் துப்பாக்கியால் என்னை சுட்டனர். எனது இடது கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மறுபக்கம் வெளியேறியது. அந்த குண்டு எனது அருகில் நின்ற இளம்பெண்ணின் மீது பட்டது. இதில் அவர் இறந்துவிட்டார்.

    போராட்டத்தில் முன்னின்று ஆவேசமாக பேசியவர்களை போலீசார் குறிவைத்து சுட்டனர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். #sterliteprotest 
    Next Story
    ×