search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேனி மாவட்டத்தில் 97.72 சதவீதம் தேர்ச்சி
    X

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேனி மாவட்டத்தில் 97.72 சதவீதம் தேர்ச்சி

    தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 97.72 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். #SSLCResult #TNResult
    தேனி:

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் 8,111 மாணவர்களும், 7,874 மாணவிளும் என 15,985 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 7,847 மாணவர்களும், 7,774 மாணவிகளும் என மொத்தம் 15,621 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.75 சதவீதமும், மாணவிகள் 98.73 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 97.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மாநில அளவில் 6-வது இடமாகும்.

    தேனி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 96.57 சதவீதமும், கடந்த ஆண்டு 97.10 சதவீதம் மாணவ-மாணவிகளே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு 97.72 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேனி மாவட்டத்தில் 81 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,199 மாணவர்களும், 5,067 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 97.46 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் பார்வையற்ற 13 பேர், வாய்பேச இயலாத 17 பேர் உடல் ஊனமுற்ற 20 பேர், கண்பார்வையற்ற 13 பேர், காது கேளாத 17 பேர் என மாற்று திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் காதுகேளாத மாணவர்கள் 100 சதவீதமும், உடல் ஊனமுற்ற மாணவர்கள் 95 சதவீதமும், இதர மாணவர்கள் 100 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் தேர்வு முடிவுகள் அந்தந்த மாணவர்களின் செல்போனுக்கே குறுந்தகவலாக அனுப்பப்பட்டது. தரவரிசை பட்டியல் இல்லாமல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளில் எவ்வித ஆரவாரம், கொண்டாட்டம் காணப்படவில்லை.

    பள்ளிகளிலும் குறைந்த அளவு மாணவர்களே வந்திருந்து தங்கள் தேர்வு முடிவுகளை பார்த்து சென்றனர். மாணவர்களின் உளவியல் பிரச்சனைக்கு இந்த மதிப்பெண் பட்டியல் வெளியீடு சிறந்த முறையில் இருப்பதாக பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். #SSLCResult #TNResult
    Next Story
    ×