என் மலர்
செய்திகள்

பவானி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தாத்தா-பேரன் பலி
பவானி:
பவானியை அடுத்த ஆர்.என்.புதூர், பெருமாள் மலையை சேர்ந்தவர் விஜயசந்திரன்(வயது35).இவரது மகன் தர்ஷன்(9) மகள் வர்ஷினி(7).
வீட்டில் உள்ள மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளதால் குளிப்பதற்காக நேற்று மாலை தர்ஷனும், வர்ஷினியும் தனது தாத்தா நவயுகத்துடன்(62) மாயபுரம் மங்களபடித்துறையில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றனர்.
பேரன் தர்ஷனுடன் நவயுகம் குளித்து கொண்டிருந்தார். கரையோரத்தில் வர்ஷினி நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தர்ஷன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தர்ஷன் நீரில் மூழ்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நவயுகம் பேரனை காப்பாற்ற சென்றார். இதில் அவரும் நீரில் மூழ்கினார். தன் கண் முன்னே தனது அண்ணனும், தாத்தாவும் நீரில் மூழ்குவதை பார்த்து வர்ஷினி கூச்சலிட்டாள்.
அவளது அலறல் சத்தத்தை கேட்டு அந்த வழியாக வந்தவர்கள் சிறுமிடம் ஏன் அழுகிறாய்? என்று கேட்டனர். சிறுமி நடந்த சம்பவத்தை கூறி அழுதாள்.
இதையடுத்து இளைஞர்கள் சிலர் காவிரி ஆற்றில் குதித்து நவயுகம், தர்ஷன் ஆகியோரை காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர்களால் 2 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவிரி ஆற்றில் மூழ்கி தாத்தா-பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






